தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் வருகிற பிப்.16, 17 - ஆகிய இரண்டு நாள்கள் நடத்தப்படும் செயல் அலுவலர் (நிலை 3 மற்றும் 4) பதவிகளுக்கான போட்டித் தேர்வை தருமபுரி மாவட்டத்தில் 6159 பேர் எழுதுகின்றனர்.
இது குறித்து, தருமபுரி மாவட்ட ஆட்சியர் சு.மலர்விழி செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் இந்து அறநிலையத்துறை செயல் அலுவலர் நிலை 3 மற்றும் 4 பதவிகளுக்கான போட்டித் தேர்வு பிப்.16 மற்றும் 17 ஆகிய தேதிகளில் முற்பகல் மற்றும் பிற்பகல் ஆகிய இருவேளைகளில் நடைபெறவுள்ளது. இத் தேர்வுக்கான அனைத்து ஏற்பாடுகளும் முழு அளவில் செய்யப்பட்டுள்ளன. தருமபுரி மையத்தில் மொத்தம் 6159 பேர் இந்தத் தேர்வை எழுத உள்ளனர். தேர்வு எழுதுவோர் தேர்வு மையத்தில் செல்லிடப்பேசி, கணக்கிடும் கருவி மற்றும் மின்னணு கைக்கடிகாரம் போன்ற தகவல் பரிமாற்ற உபகரணங்களை பயன்படுத்த அனுமதி இல்லை. எனவே, அவற்றை தேர்வு மையங்களுக்கு கொண்டு வருவதைத் தவிர்க்க வேண்டும். தேர்வு மையங்களில் முறைகேடுகள் நடைபெறுவதைத் தடுக்க கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. எனவே, தேர்வர்கள் எந்தவிதமான முறைகேடான நடவடிக்கைகளிலும் ஈடுபடக்கூடாது. மேலும் தேர்வு மையங்கள் வழியாகச் செல்லும் பேருந்துகள் அனைத்தும் தேர்வு மையங்களிலும் நிறுத்தம் செய்யவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றார்.