தருமபுரி அருகே சத்துணவு உட்கொண்ட மாணவர்களுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டது.
இதையடுத்து உணவு உட்கொண்ட 38 மாணவர்கள் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டனர்.
தருமபுரி அருகே வெள்ளோலை கிராமத்தில் அரசு உயர்நிலைப் பள்ளி இயங்கி வருகிறது. இப் பள்ளியில், 284 மாணவர்கள் பயின்று வருகின்றனர்.
வழக்கம்போல் புதன்கிழமை பள்ளி மாணவர்களுக்கு சத்துணவு வழங்கப்பட்டது. அப்போது 6 மற்றும் 7-ஆம் வகுப்பு மாணவர்கள் முதலில் சத்துணவை உட்கொண்டனர்.
சில மாணவர்களுக்கு திடீரென வாந்தி, மயக்கம் ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக தகவல் அறிந்த பள்ளி ஆசிரியர்கள் சத்துணவு உட்கொண்ட 38 மாணவர்களை சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர்.
தகவல் அறிந்ததும் மாவட்ட கல்வித்துறை அதிகாரிகள் பள்ளிக்குச் சென்று விசாரணை நடத்தியதில், மாணவர்கள் உட்கொண்ட உணவில் பல்லி இருந்தது தெரியவந்தது. இதுகுறித்து அதிகாரிகள் தொடர் விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட மாணவர்களை முன்னாள் அமைச்சர் வ. முல்லைவேந்தன் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.