எண்ணேகொல்புதூர்-தும்பலஅள்ளி இணைப்பு கால்வாய் திட்டத்துக்கு விரைவில் அரசாணை வெளியிடப்படும் என மாநில உயர் கல்வித் துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் தெரிவித்தார்.
தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி அருகே வெள்ளிக்கிழமை மாரியம்மன் கோயில் பள்ளம் அணைக்கட்டு திட்டம் புனரமைப்புப் பணிகளை தொடங்கி வைத்து அமைச்சர் கே.பி.அன்பழகன் பேசியது: எண்ணேகொல்புதூரில் வலது, இடது கால்வாய்கள் அமைக்கப்பட உள்ளன. இதில், இடதுபுறக் கால்வாய் மூலம் தென்பெண்ணை ஆற்றின் உபரி நீரை கிருஷ்ணகிரிக்கும், வலதுபுறக் கால்வாய் மூலம் தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்ட மக்கள் பயன்பெறும் வகையில் தண்ணீர் கொண்டு வரப்பட உள்ளது. வலதுபுறக் கால்வாய் வழியாக தும்பலஅள்ளி அணைக்கு நீர்வரத்து கிடைக்கும். அதேபோல, அலியாளம்-தூள்செட்டி ஏரி, ஜெர்த்தலாவ்-புலிகரை ஏரி இணைப்பு கால்வாய் திட்டம் என மூன்று திட்டங்களுக்கும் கால்வாய் அமைக்க நிலம் கையகப்படுத்தும் பணி தற்போது தொடங்கப்படும்.
இந்தத் திட்டம் குறித்து எதுவும் தெரியாமல், கடந்த 5 ஆண்டுகளாக இந்த மாவட்டத்தில் அமைச்சராக இருந்தவர், தற்போது ஆர்ப்பாட்டம் நடத்துகிறார். அவருக்கு இந்த ஏரிகள் எங்கே உள்ளது என்பது கூட தெரியாது. இத் திட்டங்களை அவர்கள் கொச்சைப்படுத்துகின்றனர். விரைவில் இத்திட்டத்துக்கான அரசாணை வெளியிடப்படும். அதேபோல, ஊழல் வழக்குகளில் சிக்கியுள்ள டி.டி.வி.தினகரனுக்கு, என்னை விமர்சிக்க தகுதியில்லை. புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிவாரணப் பணிகள் முழுமையாக முடிக்க காலஅவகாசம் தேவைப்படுகிறது. எனவேதான் திருவாரூர் இடைத்தேர்தலுக்கு, அரசின் சார்பில் அவகாசம் கோரப்பட்டது. எங்களுக்கு தேர்தலைக் கண்டு அச்சமில்லை. எப்போது தேர்தல் வந்தாலும், அதிமுக அதனை சந்திக்கத் தயாராக உள்ளது என்றார்.