பணிபுரியும் பெண்களுக்கு மானிய விலையில் வழங்கப்படும் அம்மா இருசக்கர வாகனத் திட்டத்தில் வாகனங்கள் பெற விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, தருமபுரி மாவட்ட ஆட்சியர் சு. மலர்விழி வெளியிட்ட செய்திக்குறிப்பு:
பணியிடங்களுக்கும், பிற வேலைகளுக்கும் எளிதில் செல்லும் வகையில் மகளிர் இரு சக்கர வாகனம் வாங்க 50 சத மானியத்தில் அம்மா இரு சக்கர வாகனத் திட்டம் மகளிர் நல மேம்பாட்டு நிறுவனத்தின் மூலம் செயல்படுத்தப்படவுள்ளது.
2018-19-ஆம் ஆண்டுக்கு இத் திட்டத்தின் கீழ் பயன்பெற 18 முதல் 40 வயதுக்குள்பட்ட இருசக்கர வாகன ஓட்டுநர் உரிமம் உள்ள ஆண்டு வருமானம் ரூ. 2,50,000 உள்ள மகளிர், அரசு சாரா நிறுவனங்கள், தனியார் நிறுவனங்கள், கிராம வறுமை ஒழிப்புச் சங்கம், ஊராட்சி அளவிலான கூட்டமைப்புகள், அரசு திட்டங்களில் பணிபுரிபவர்கள், வங்கி ஒருங்கிணைப்பாளர்கள், மாவட்ட மக்கள் கற்றல் மையம் பணியாளர்கள் மற்றும் பிற பணிபுரிபவர்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பங்களை அனைத்து வட்டார வளர்ச்சி அலுவலகங்கள், தருமபுரி நகராட்சி அலுவலகம் மற்றும் அனைத்து பேரூராட்சிகளிலும் வருகிற ஜன.18-ஆம் தேதி வரை விண்ணப்பங்களை அனுப்பலாம்.
இது தொடர்பாக புகார் இருப்பின், 1077, 8903891077, 1800 425 7016, 1800 425 1071 -இல் தெரிவிக்கலாம் என்றார்.