தருமபுரி மாவட்டம், பாலக்கோட்டில் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் அரசு கல்லூரி மாணவியர் விடுதி அண்மையில் திறக்கப்பட்டது.
சார்-ஆட்சியர் ம.ப. சிவன்அருள் தலைமையில் நடைபெற்ற விழாவில், மாநில உயர்கல்வித் துறை அமைச்சர் கே.பி.அன்பழகன், குத்துவிளக்கேற்றி விடுதியைத் திறந்து வைத்துப் பேசியது:
பாலக்கோட்டில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி 2017-18 கல்வி ஆண்டில் தொடங்கப்பட்டது. கிராமப்புறங்களிலிருந்து வரும் ஏழை, எளிய குடும்பத்தைச் சேர்ந்த மாணவியரின் விடுதி வசதி வேண்டும் என்ற கோரிக்கையினை அரசு ஏற்று, தற்போது மாணவியர் விடுதி துவங்கப்பட்டுள்ளது.
விடுதியில் 100 மாணவியர் தங்கி கல்வி பயில நூலக வசதி, சுகாதாரமான உணவு, குடிநீர் வழங்கிட வழிவகை செய்யப்பட்டது.
பாலக்கோடு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பயிலும் மாணவியர் தங்கிப் பயில புதிய விடுதி கட்ட இடம் தேர்வு செய்யப்பட்டு விரைவில் விடுதி கட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
இந்த வாய்ப்பை பாலக்கோடு பகுதியில் உள்ள மாணவியர் முழுமையாகப் பயன்படுத்தி உயர்கல்வியை கற்று வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்திக் கொள்ள வேண்டும் என்றார்.
விழாவில், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் அமிர்பாஷா, வட்டாட்சியர் வெங்கடேஷ்வரன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ராமஜெயம், தனபால் ஆகியோர் கலந்து கொண்டனர்.