கட்சி நிர்வாகியை தாக்கியவர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, திமுக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்களுடன் தருமபுரி எம்.எல்.ஏ. தடங்கம் பெ.சுப்பிரமணி அதியமான்கோட்டை காவல் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டார்.
அதியமான்கோட்டையில் காணும் பொங்கலையொட்டி வியாழக்கிழமை எருது விடும் திருவிழா நடைபெற்றது. இந்த விழா முடிவில், இளைஞர் ஒருவர் அதியமான்கோட்டையைச் சேர்ந்த திமுக நிர்வாகியை தாக்கியுள்ளார்.
இச்சம்பவம் தொடர்பாக நடவடிக்கை எடுக்கக் கோரி, அப்பகுதி பொதுமக்கள் மற்றும் திமுக நிர்வாகிகள் வெள்ளிக்கிழமை அதியமான்கோட்டை காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர். இப் போராட்டத்தில், தருமபுரி தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் தடங்கம் பெ.சுப்பிரமணி பங்கேற்று, திமுக நிர்வாகியை தாக்கியவர் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார்.
தகவல் அறிந்த காவல் துணைக் கண்காணிப்பாளர் த.காந்தி, நிகழ்விடத்துக்கு சென்று போராட்டத்தில் ஈடுபட்ட எம்.எல்.ஏ. தடங்கம் பெ.சுப்பிரமணி மற்றும் நிர்வாகிகளிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். இதில், தாக்குதல் சம்பவம் குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் உறுதியளித்தார். இதையடுத்து, சமாதானமடைந்த திமுகவினர் போராட்டத்தை கைவிட்டு கலைந்து
சென்றனர்.