தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி வட்டம், மெணசி பகுதியிலுள்ள வனப் பகுதியில் அதிக அளவில் காட்டெருமைகள் உள்ளன. தற்போது வறட்சியின் காரணமாக வனப் பகுதியில் போதிய அளவில் தீவனங்கள் இல்லாத நிலையில், காட்டெருமைகள் விவசாய நிலங்களை நோக்கி வருகின்றன.
இந்த நிலையில், மெணசி ஜீவா நகரைச் சேர்ந்த விவசாயி ஒருவரின் விவசாய நிலத்தில் இருந்த சோலைப் பயிர்களை காட்டெருமைகள் மேய்ந்துள்ளன. வாடிய நிலையில் இருந்த சோலைப் பயிர்களை உண்டதால், ஜீரணிக்க முடியாமல் சுமார் 5 வயதுடைய ஆண் காட்டெருமையும், 3 வயதுடைய பெண் காட்டெருமையும் உயிரிழந்தன.
அரசு கால்நடை மருத்துவர் பிரகாஷ் தலைமையிலான மருத்துவக் குழுவினர் காட்டெருமைகளை பரிசோதனை செய்தனர். தொடர்ந்து, மொரப்பூர் வனச்சரகர் தீ.கிருஷ்ணன் தலைமையிலான வனத்துறையினர், உயிரிழந்த 2 காட்டெருமைகளையும் வனப் பகுதியில் புதைத்தனர்.