தீர்த்தமலையில் கோயிலுக்கு செல்லும் மண் சாலையை சீரமைக்க வேண்டும் என பக்தர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
அரூர்-திருவண்ணாமலை சாலையில் 13-ஆவது கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது தீர்த்தமலை தீர்த்தகிரீஸ்வரர் திருக்கோயில். வரலாற்றுச் சிறப்பு மிக்க இந்த கோயிலுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர்.
இந்த நிலையில், தீர்த்தமலை பேருந்து நிலையத்தில் இருந்து தேரடி வீதி வழியாக தீர்த்தகிரீஸ்வரர் மலைக் கோயிலுக்கு செல்லும் சுமார் 1 கிலோ மீட்டர் தூரமுள்ள மண் சாலையானது குண்டும், குழியுமாக போக்குவரத்துக்கு பயனற்ற வகையில் உள்ளது. இதனால் கோயிலுக்கு பக்தர்கள் நடந்து செல்லவும், இருசக்கர வாகனம், கார், பேருந்துகள் உள்ளிட்ட வாகனங்களில் செல்லவும் பல்வேறு இன்னல்களை அடைகின்றனர்.
எனவே, தீர்த்தமலை பேருந்து நிலையத்தில் இருந்து மலைக்கோயில் வரையிலும் உள்ள மண் சாலையை சீரமைக்க மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தர்கள் வலியுறுத்தியுள்ளனர்.