தருமபுரி: தருமபுரியில் வழிப்பறி வழக்கில் கைதாகி தப்பியோடியவர் போலீஸாரிடம் புதன்கிழமை பிடிபட்டார்.
தருமபுரி நகரில், பேருந்துக்காக நின்று கொண்டிருந்தவரை தாக்கி வழிப்பறி செய்ததாக குமாரசாமிபேட்டையைச் சேர்ந்த வினோத் (21), கடந்த 8-ஆம் தேதி கைது செய்யப்பட்டார். அதைத் தொடர்ந்து, தருமபுரி குற்றவியல் நீதிமன்றம் எண் 2 நடுவர் முன் ஆஜர்படுத்தப்பட்டார்.
அப்போது, கைதான வினோத்துக்கு காலில் காயம் இருந்ததால், அதற்கு அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளித்து பின் சிறையில் அடைக்க நீதித்துறை நடுவர் உத்தரவிட்டார்.
இதன் பேரில், தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக வினோத் சேர்க்கப்பட்டார். இவருக்கு காவலாக சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் மற்றும் இரண்டு காவலர்கள் பணியமர்த்தப்பட்டிருந்தனர்.
இந்த நிலையில், கடந்த 11-ஆம் தேதி அதிகாலை மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த வினோத் அங்கிருந்து தப்பிச் சென்றார். இதைத் தொடர்ந்து, தருமபுரி நகரப் போலீஸார் இவரை தொடர்ந்து பல்வேறு இடங்களில் தேடிவந்தனர்.
இந்நிலையில், கர்நாடக மாநிலம், பெங்களூரில் இருந்த வினோத் போலீஸாரிடம் பிடிபட்டார். அவரை அழைத்து வந்த தருமபுரி நகரப் போலீஸார், அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.