அரூர் - சேலம் நெடுஞ்சாலையில் அதிக சுமை ஏற்றிக் கொண்டு லாரிகள் செல்வதைக் கட்டுப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தினர்.
அரூர் வழியாகச் செல்லும் சேலம் முதல் வாணியம்பாடி வரையிலான நெடுஞ்சாலையில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் செல்கின்றன. இந்த சாலையானது இருவழிச்சாலையாகும். அதேபோல, இந்தச் சலையானது போதிய பராமரிப்பு இல்லாத நிலையில் தற்போது குண்டும், குழியுமாக போக்குவரத்துக்கு பயனற்ற வகையில் உள்ளது.
தருமபுரி வழியாகச் செல்லும் கிருஷ்ணகிரி - சேலம் தேசிய நெடுஞ்சாலையில், இரண்டு இடங்களில் சுங்கச்சாவடிகள் (டோல்கேட்) உள்ளன. இந்த சுங்கச் சாவடிகளில் கட்டணம் செலுத்துவதைத் தவிர்க்க, அதிக சுமை ஏற்றிச் செல்லும் லாரிகள், மொரப்பூர் வழியாகச் செல்லும் காரிமங்கலம் - அரூர் சாலையில் சேலம் செல்கின்றன.
இதேபோல், சேலத்தில் இருந்து வரும் வாகனங்கள் ஊத்தங்கரை, திருப்பத்தூர் வழியாக வேலூர், சென்னை பகுதிகளுக்குச் செல்கின்றன. கூடுதல் சுமை ஏற்றிச் செல்லும் லாரிகள் அதிக அளவில் சேலம் - அரூர் சாலையில் செல்வதால், இந்தச் சாலையானது தொடர்ந்து சேதமடைந்து வருகிறது.
இதனால், இந்த வழித்தடத்தில் செல்லும் அரசு மற்றும் தனியார் பேருந்துகள், பள்ளி மற்றும் கல்லூரி பேருந்துகள், கார்கள், இருசக்கர வாகனங்கள் உள்ளிட்ட அனைத்து வாகன ஓட்டிகளும் நாள்தோறும் பல்வேறு சிரமங்களை அடைகின்றனர்.
எனவே, அரூர் - சேலம் சாலையில் அதிக சுமை ஏற்றிச்செல்லும் வெளிமாநில லாரிகள், தொலைதூரம் செல்லும் கனரக சரக்கு வாகனங்களை தருமபுரி வழியாகச் செல்லும் சேலம் - கிருஷ்ணகிரி சாலையில் செல்ல காவல்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், சேதமடைந்துள்ள சேலம் - அரூர் நெடுஞ்சாலையை சீரமைப்பு செய்ய தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பு.