மொரப்பூர் அருகேயுள்ள ரயில்வே சுரங்கப் பாதையை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தினர்.
மொரப்பூர்-தொங்கனூர் ரயில்வே பாதையில், தாசரஹள்ளி எனுமிடத்தில் ரயில்வே சுரங்கப் பாதை அமைந்துள்ளது. இந்த சுரங்கப் பாதையை சிந்தல்பாடி, தாசரஹள்ளி, மொரப்பூர், வகுத்துப்பட்டி, தொங்கனூர் உள்பட 30 மேற்பட்ட கிராம மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். ஆனால், இந்த ரயில்வே சுரங்கப் பாதையானது குண்டும், குழியுமாக போக்குவரத்துக்கு பயனற்ற வகையில் உள்ளது. இதனால், இந்த சாலை வழியாக கார், இருசக்கர வாகனங்கள், மினி சரக்கு வாகனங்கள் செல்ல முடியாத நிலையுள்ளது.
மேலும், ரயில்வே சுரங்கப்பாதை சேதமடைந்து இருப்பதால், சுமார் 10 கிலோ மீட்டர் தூரம் வாகனங்கள் சுற்றிச் செல்லும் நிலையுள்ளது. எனவே, மொரப்பூரை அடுத்த தாசரஹள்ளி அருகேயுள்ள ரயில்வே சுரங்கப் பாதையை சீரமைக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பு.