தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவியர் சேர்க்கைக்கான இரண்டாம் கட்ட கலந்தாய்வு புதன்கிழமை நடைபெற உள்ளது.
இது குறித்து, கல்லூரி முதல்வர் இரா.சந்திரன் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு: காரிமங்கலம் அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நிகழ்கல்வியாண்டில் மாணவியர் சேர்க்கைக்கான இரண்டாம் கட்ட கலந்தாய்வு புதன்கிழமை (ஜூன் 26) காலை 10 மணிக்கு அனைத்து இளங்கலை மற்றும் இளமறிவியல் பாடப் பிரிவுகளுக்கு நடைபெற உள்ளது. எனவே, சேர்க்கைக்கு விண்ணப்பித்த அனைத்து மாணவியரும், உரிய சான்றிதழ்கள் மற்றும் நகல்களுடன், கல்லூரிக்கு செலுத்த வேண்டிய கட்டணம் ரூ.1,100 உடன் பெற்றோருடன் வந்து கலந்தாய்வில் பங்கேற்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.
அதேபோல, இக் கல்லூரியில் எம்.ஏ. தமிழ், ஆங்கிலம், எம்.காம்., எம்.எஸ்சி., கணிதம், கணினி அறிவியல், இயற்பியல், வேதியியல் ஆகியப் பாடப்பிரிவுகளில் மாணவியர் சேர்க்கைக்கு விண்ணப்பங்கள் வருகிற ஜூலை 3-ஆம் தேதி வரை கல்லூரி வேலை நாள்களில் வழங்கப்படும். விண்ணப்பத்தின் விலை ரூ.60 ஆகும். தலித் மற்றும் பழங்குடியின மாணவியர் தங்களது ஜாதிச் சான்றிதழ் நகலை சமர்ப்பித்து விண்ணப்பத்தை இலவசமாக பெற்றுக்கொள்ளலாம். முதுகலை மற்றும் மூதறிவியல் பாடப் பிரிவுகளில் மாணவியர் சேர்க்கைக்கான முதல் கட்ட கலந்தாய்வு ஜூலை 10-ஆம் தேதி காலை 10 மணிக்கு நடைபெற உள்ளது.