அரூர் அருகே தீக்காயம் அடைந்த சிறுமி வெள்ளிக்கிழமை உயிரிழந்தார்.
அரூர் வட்டம், பையர்நாய்க்கன்பட்டி கிராமத்தைச் சேர்ந்த சேட்டு மகன் பாபு (26). தொழிலாளி. இவரது மகள் அஸ்வினி (8). இவர், அங்குள்ள அரசு தொடக்கப் பள்ளியில் 3-ஆம் வகுப்பு படித்து வந்தார்.
இந்த நிலையில், பிப்ரவரி 12-ஆம் தேதி, வீட்டின் மேல்மாடியில் சிறுமி ஊது பத்தியை வைத்துக்கொண்டு விளையாடினராம். அப்போது, எதிர்பாராதவிதமாக அவரது ஆடையில் தீப்பிடித்துள்ளது. இதில், தீக்காயமடைந்த சிறுமியை அவரது பெற்றோர் சேலம் தனியார் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். தொடர்ந்து, சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த சிறுமி அஸ்வினி வெள்ளிக்கிழமை உயிரிழந்தார்.
இது குறித்து கோட்டப்பட்டி போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.