தருமபுரி வன மாவட்டத்துக்குள்பட்ட கோட்டப்பட்டி, ஒகேனக்கல் மற்றும் அரூர் வனப் பகுதியில் வியாழக்கிழமை தீப்பற்றி எரிந்தது.
தருமபுரி வன மாவட்டத்தில் தற்போது மழையின்மையாலும், கோடையின் தாக்கத்தாலும் கடுமையான வறட்சி நிலவி வருகிறது. வனப் பகுதியில் நீரின்றி புல்வெளிகள், செடிகள், மரங்கள் காய்ந்த நிலையில் உள்ளன. இந்த நிலையில், அரூர் வனப்பகுதி, கோட்டப்பட்டி மற்றும் ஒகேனக்கல் ஆகிய வனப் பகுதியில் சில இடங்களில் வியாழக்கிழமை திடீரென தீப்பற்றி எரியத் தொடங்கியது.
தகவல் அறிந்த வனத் துறையினர் பற்றி எரிந்த தீயை போராடி அணைத்தனர். இதில், கோட்டப்பட்டி மற்றும் ஒகேனக்கல்லில் முத்திராயன் வனப் பகுதியில் சுமார் அரை மணி நேரமும், அரூர் வனப் பகுதியில் சுமார் 2 மணி நேரமும் தீ மளமளவென எரிந்தது.
இந்த விபத்தில், மரங்கள் ஏதும் சேதமடையவில்லை எனவும், புல்வெளிகள் மட்டும் தீக்கிரையானதாகவும் வனத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது. இருப்பினும், தீ விபத்துக்கான காரணம் குறித்து வனத் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், வனப்பகுதியை ஒட்டியுள்ள கிராமங்களில் ஆடு, கால்நடைகள் மேய்ப்போரிடம் இதுகுறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருவதாக வனத் துறையினர் தெரிவித்தனர்.