தருமபுரியில் மண்டல அலுவலர்களுக்கு மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தின் பயன்பாடு குறித்த பயிற்சி வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டது.
தருமபுரி மாவட்ட ஆட்சியர் கூட்டரங்கில் நடைபெற்ற இப் பயிற்சி முகாமுக்கு தலைமை வகித்த மாவட்ட தேர்தல் அலுவலரும், ஆட்சியருமான சு.மலர்விழி பேசியது: தருமபுரி மக்களவைத் தொகுதிக்கு தேர்தல் மற்றும் பாப்பிரெட்டிப்பட்டி, அரூர் (தனி) ஆகிய சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வரும் ஏப். 18-இல் நடைபெற உள்ளது.
இதில், இடைத்தேர்தல் நடைபெறும் பாப்பிரெட்டிப்பட்டி, அரூர் (தனி) சட்டப்பேரவைத் தொகுதி வாக்காளர்கள் 2 வாக்குகள் செலுத்திட வேண்டும். வாக்காளர்கள் அடையாள அட்டை, தேர்தல் ஆணையம் அனுமதித்த 11 சான்றிதழ்களை காண்பித்து வாக்களிக்கலாம். மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தின் பயன்பாடு குறித்து மண்டல அலுவலர்கள் நல்ல முறையில் பயிற்சி பெற்று, வாக்குச் சாவடி அலுவலர்களுக்கு பயிற்சி வழங்கிட வேண்டும் என்றார்.
மாவட்ட வருவாய் அலுவலர் எச்.ரஹமத்துல்லா கான், அரூர் சர்க்கரை ஆலை மேலாண்மை இயக்குநர் இரா.கீர்த்தி பிரியதர்ஷினி, ஆதிதிராவிடர் நல அலுவலர் கோவிந்தன், பாப்பிரெட்டிப்பட்டி தேர்தல் நடத்தும் அலுவலர் கீதாராணி ஆகியோர் கலந்துகொண்டனர்.