தருமபுரி, பாலக்கோடு, பென்னாகரம் ஆகிய சட்டப்பேரவைத் தொகுதிகளுக்குள்பட்ட வாக்குச் சாவடி மையங்களில் மாவட்ட தேர்தல் அலுவலரும், ஆட்சியருமான சு.மலர்விழி வெள்ளிக்கிழமை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
தருமபுரி, பாலக்கோடு மற்றும் பென்னாகரம் ஆகிய சட்டப்பேரவைத் தொகுதிகளுக்குள்பட்ட பாதிப்புக்குள்ளானதாக அடையாளம் காணப்பட்ட வாக்குச் சாவடி மையங்கள் ஆய்வு செய்யப்பட்டன. இதில், பென்னாகரம் பேரவைத் தொகுதிக்குள்பட்ட மாங்கரை, நல்லாம்பட்டி, நாகதாசம்பட்டி, தருமபுரி பேரவைத் தொகுதிக்குள்பட்ட பழைய இண்டூர், பள்ளப்பட்டி, பாலக்கோடு பேரவைத் தொகுதிக்குள்பட்ட அனுமந்தபுரம் ஆகிய வாக்குச் சாவடி மையங்களில் நேரில் பார்வையிட்ட ஆட்சியர், இந்த வாக்குச் சாவடி மையங்களில் மேற்கொள்ளப்பட்டுள்ள பாதுகாப்பு நடவடிக்கைகள், அமைதியான வாக்குப் பதிவுக்காக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் மற்றும் முந்தைய தேர்தலின் போது, நிகழ்ந்த நிகழ்வுகள் குறித்து கேட்டறிந்து அலுவலர்களுடன் ஆய்வு செய்தார். ஆய்வின் போது, மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ப.ராஜன், கூடுதல் காவல் கண்காணிப்பாளர் சுஜாதா, உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் தேன்மொழி மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.