நீர் நிலை குட்டையில் வீட்டுமனைப் பட்டா வழங்கியதை ரத்து செய்ய வேண்டும் என கோரி பருவதனஅள்ளி கிராம மக்கள், மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்ட அரங்கில், வாராந்திர மக்கள் குறைதீர் கூட்டம், திங்கள்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பென்னாகரம் அருகே உள்ள பருவதனஅள்ளி கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள், அளித்த மனுவின் விவரம்: பருவதனஅள்ளி கிராமத்தில் குமரன்குட்டை (தம்பரான் குட்டை) உள்ளது. இந்த குட்டையின் அருகே உள்ள அரசு புறம்போக்கு நிலத்தில் 50 புளிய மரங்கள் இருந்தன. தற்போது அது 9 ஆக குறைந்துவிட்டது. இத்தகைய நிலையில் அந்த அரசு புறம்போக்கு நிலத்தில் இலவச வீட்டுமனை பட்டாக்கள் வழங்கப்பட்டுள்ளன.
எனவே, இந்த வீட்டுமனை பட்டாக்களை ரத்து செய்து, நீர் நிலை, குட்டையை மேம்படுத்தி நீர் ஆதாரத்தை அதிகரிக்க தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், நீர் நிலை குட்டையின் அருகே உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் வலியுறுத்தி உள்ளனர்.