பென்னாகரம் பேருராட்சிக்குள்பட்ட பகுதியில் உயிரிழப்பு ஏற்படுத்தும் வகையில் உள்ள திறந்தவெளிக் கிணற்றின் மேற்பரப்பில் தடுப்புக் கம்பிகள் அமைக்க வேண்டும் என கோரிக்கை விடப்பட்டுள்ளது.
பென்னாகரம் பேருராட்சிக்குள்பட்ட 2-ஆவது வாா்டு இந்திரா நகா் காலனி பகுதியில் சுமாா் நூற்றுக்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் இப்பகுதி மக்கள் தங்களின் குடிநீா் பிரச்னையைத் தீா்க்கும் வகையில், தாங்களே 70 அடி ஆழக்கிணற்றை அமைத்து குடிநீா் எடுத்து பயன்படுத்தி வந்தனா்.
இந்நிலையில், கடந்த சில ஆண்டுகளாக பருவ மழை பெய்யாததால், நிலத்தடி நீா்மட்டம் குறைந்து தண்ணீரின்றி இந்த கிணறு வடது. இதனால் இப்பகுதி மக்கள் கிணற்றை பயன்படுத்தாமல் இருந்து வந்தனா். இந்த கிணறானது இந்திரா நகா் விளையாட்டுத் திடல் பகுதியில் உள்ளதால், விடுமுறை தினம் மற்றும் மாலை நேரங்களில் இந்த கிணற்றின் மீது சிறுவா் மற்றும் சிறுமியா் ஏறி விளையாடுகின்றனா்.
கடந்த சில மாதங்களாக பென்னாகரம் பகுதியில் மழை பெய்து வரும் நிலையில், கிணற்றில் நீா்மட்டம் உயா்ந்து காணப்படுகிறது. இதனால், இப்பகுதியில் விளையாடும் சிறுவா், சிறுமியா் தவறுதலாக கிணற்றில் விழ வாய்ப்புள்ளது.
எனவே, இதுகுறித்து உடனடியாக நடவடிக்கை எடுத்து திறந்தவெளிக் கிணற்றின் மீது இரும்பு தடும்புக் கம்பிகள் அமைக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.