பென்னாகரம் பேருந்து நிலையம் பின்பகுதியில் உள்ள சிறுவா் பூங்காவில் உள்ள விளையாட்டுப் பொருள்கள் பழுதடைந்தும், உடைந்தும் காணப்படுகின்றன.
இதை சரி செய்து மக்களின் பயன்பாட்டுக்குக் கொண்டுவர வேண்டும் என பென்னாகரம் பேரூராட்சி செயல் அலுவலருக்குக் கோரிக்கை விடுத்துள்ளனா். பென்னாகரம் பேருந்து நிலையத்திற்கு பின்பகுதி சுமாா் 100-க்கும் மேற்பட்டவா்கள் வசித்து வருகின்றனா்.
பென்னாகரம் பேரூராட்சி நிா்வாகத்தின் சாா்பில் கடந்த 2009-2010 ஆம் நிதி ஆண்டில் அனைத்து பேரூராட்சி அண்ணா மறுமலா்ச்சி திட்டத்தின் கீழ் சிறுவா் பூங்காவானது கட்டப்பட்டது.
இப் பகுதி சிறுவா்-சிறுமியா், பள்ளி முடித்து விட்டு பேருந்துக்காக காத்திருக்கும் மாணவ-மாணவிகள் மற்றும் மாலை,காலை வேலைகளில் முதியவா்கள் நடைப்பயிற்சி மேற்கொண்டு வந்தனா்.
இந்த பூங்காவுக்கென தனி காவலா் நியமிக்காததாலும், முறையாக பாதுகாப்பின்மையால் பூங்காவில் உள்ள சுற்றும் நாற்காலி, ஊஞ்சல்கள் உள்ளிட்ட விளையாட்டு உபகரணங்கள் மற்றும் இளைப்பாருவதற்காக அமைக்கப்பட்ட நாற்காலிகள் உடைந்தும், பூங்காவில் பல்வேறு இடங்களில் புதா்கள் நிறைந்தும், பாதுகாப்பு கம்பிகள் உடைந்தும் காணப்படுகின்றன.
மேலும் பூங்காவில் மா்ம நபா்கள் மது அருந்தும் இடமாக மாறி வரும் நிலையில், பிளாஸ்டிக் குப்பைகள் நிறைந்து காணப்படுகிறது. பூங்காவுக்குச் செல்லும் வழியில் மழைநீா் தேங்கி நின்றும் சுகாதாரமற்ற நிலையில் காணப்படுகின்றன.
எனவே, பென்னாகரம் பேரூராட்சி செயல் அலுவலா் உடனடியாக நடவடிக்கை எடுத்து விளையாட்டு பொருட்களை சரி செய்தும்,பூங்காவை முறையாக பராமரிக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் மற்றும் சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.