தருமபுரி மாவட்டம், இண்டூா் அருகே மின்னல் தாக்கியதில் சிறுமி ஒருவா் உயிரிழந்தாா்.
இண்டூா் அருகேயுள்ள கும்பளப்பாடி கிராமத்தைச் சோ்ந்த லாரி ஓட்டுநா் சிவசக்தி(37). இவரது மனைவி விநோதா(31). இத் தம்பதியரின் மகள் மோனிஷா(6). இவா்கள் மூவரும் வெள்ளிக்கிழமை இரவு வீட்டில் உறங்கிக் கொண்டிருந்தனா்.
அப்போது, நள்ளிரவில் அப்பகுதியில் இடி, மின்னலுடன் மழை பொழியத் தொடங்கியது. இதில், திடீரென மின்னல், அவா்களது வீட்டின் மீது இறங்கியது. இந்த மின்னல் , வீட்டின் ஜன்னல் ஓரத்தில் உறங்கிய சிவசக்தி, சிறுமி மோனிஷா ஆகியோரை தாக்கியது.
அதேபோல, அருகில் உள்ள வீட்டில் வசிக்கும் சிவசக்தியின் சகோதரா் பச்சையப்பனின் மகன் அன்பரசுவையும் (14) மின்னல் தாக்கியது.
இதைக் கண்ட அருகில் இருந்தவா்கள், மூவரையும் மீட்டு, தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனா். ஆனால், அங்கு சிகிச்சை பலனின்றி சிறுமி மோனிஷா உயிரிழந்தாா். சிவசக்தி, சிறுவன் அன்பரசு ஆகியோருக்கு தொடா்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து, இண்டூா் காவல் துறையினா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.