விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமை ஒகேனக்கல்லுக்கு பெங்களூரு, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலிருந்து ஏராளமான சுற்றுலாப் பயணிகள் தங்கள் குடும்பத்துடன் வந்திருந்தனர்.
கர்நாடக அணைகளில் நீர் திறப்பு அதிகரிக்கப்பட்டதால் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் வெள்ள பெருக்கு ஏற்பட்டது. இதனால் நீர்வீழ்ச்சியில் குளிக்கவும், பரிசல் சவாரி செய்யவும் மாவட்ட நிர்வாகம் தடை விதித்திருந்தது. இந்த நிலையில், காவிரி ஆற்றில் நீர்வரத்து குறைந்து வருவதால் ஒகேனக்கல்லில் பரிசல் இயக்க மாவட்ட நிர்வாகம் அண்மையில் அனுமதியளித்தது.
இதையடுத்து ஒகேனக்கல்லுக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்தது. ஒகேனக்கல்லுக்கு வந்த சுற்றுலாப் பயணிகளில் பெரும்பாலானோர்கள் காவிரியின் அழகை சின்னாறு பரிசல் துறையில் இருந்து கோத்திக்கல்,பிரதான அருவி மற்றும் மணல் மேடு உள்ளிட்ட பகுதிகளுக்குச் சென்று ரசித்தனர்.
ஒகேனக்கல்லில் வெள்ள பெருக்கின் போது பிரதான அருவி மற்றும் நடைபாதை பகுதிகள் மிகுந்த சேதமடைந்துள்ளது. இதனால் ஒகேனக்கல் பிரதான அருவிகளில் குளிக்க தொடர்ந்து தடை விதித்துள்ள நிலையில், சுற்றுலாப் பயணிகள் காவிரி கரையோரப் பகுதிகளான முதலைப் பண்னை,மாமரத்துகடவு பரிசல் துறை உள்ளிட்ட பகுதிகளில் குளித்து மகிழ்ந்தனர்.சுற்றுலாப் பயணிகள் தங்களது குடும்பத்தினருடன் முதலைப்பண்ணைகளுக்குச் சென்றனர். ஒகேனக்கல்லுக்கு சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்துள்ளதால் ,பிரதான அருவி செல்லும் பகுதி,மாமரத்துகடவு பரிசல் துறை,சின்னாறு பரிசல்துறை, ஊட்டமலை,ஆலாம்பாடி உள்ளிட்ட பகுதிகளில் 30 க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.