மோப்பிரிப்பட்டியில் பழுதாகியுள்ள மின் மோட்டாரை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அரூர் ஊராட்சி ஒன்றியம், மோப்பிரிப்பட்டியில் 1,500-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இங்குள்ள மக்களின் குடிநீர்த் தேவையை பூர்த்தி செய்யும் நோக்கில், அரூர்-மொரப்பூர் சாலையில் உள்ள இரும்பு பாலம் அருகில் ஆழ்துளைக் கிணறு, மின் இணைப்பு மற்றும் மின் மோட்டார் வசதிகள் ஏற்படுத்தப்பட்டன.
இந்த நிலையில், கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு மொரப்பூர் சாலையில் சிறுபாலம் கட்டுமானப் பணிகள் நடந்தபோது, ஆழ்துளைக் கிணற்றில் இருந்து குடியிருப்புகளுக்கு குடிநீர் செல்லும் குழாய் இணைப்புகள் துண்டிக்கப்பட்டன.
இதனால், கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக இங்குள்ள ஆழ்துளைக் கிணறு மற்றும் மின் மோட்டார் பயனற்று உள்ளது. இதனால், நேதாஜி நகர் மற்றும் மோப்பிரிப்பட்டியில் வசிக்கும் மக்களுக்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்படுவதாக புகார் கூறுகின்றனர்.
எனவே, பயனற்றுக் கிடக்கும் மின் மோட்டார் மற்றும் ஆழ்துளைக் கிணற்றை சீரமைத்து குடிநீர் வசதியை மேம்படுத்த வேண்டும் என்பதே கிராம மக்களின் எதிர்பார்ப்பாகும்.