அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தில் இருந்து பத்து பேர் பிரிந்து சென்றால், நூறு பேர் புதிதாக சேர்கின்றனர் என அமமுக பொதுச் செயலரும், எம்எல்ஏவுமான டிடிவி.தினகரன் தெரிவித்தார்.
தருமபுரி மாவட்டத்துக்குள்பட்ட எருமியாம்பட்டியில் அமமுக துணைப் பொதுச் செயலர் பி.பழனியப்பன் இல்லத் திருமண விழா வியாழக்கிழமை நடைபெற்றது. இதில், டிடிவி.தினகரன் பேசியது:
அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தில் இருந்து அண்மையில் சிலர் பதவி ஆசையில் பிரிந்து சென்றுள்ளனர். எந்தக் கட்சியிலும் உடனே பதவிகள் கிடைக்காது. பதவிக்காக இருப்பவர்கள் உண்மையான கட்சித் தொண்டர்கள் இல்லை. எந்த எதிர்பார்ப்புகளையும் பார்க்காமல் கட்சிக்காக உழைத்தால், கட்சி நமக்கு பதவிகளை வழங்கி அழகு பார்க்கும். எனவே, அமமுக தொண்டர்கள் யாரும் கட்சியில் இருந்து பிரிந்து சென்றவர்களை பற்றிக் கவலைப்பட வேண்டாம். நமது கட்சியில் இருந்த பத்து பேர் பிரிந்து சென்றால், உடனே நூறு பேர் புதிய உறுப்பினர்களாக இணைந்து வருகின்றனர். எனவே, யார் வேண்டுமனாலும் பிரிந்து செல்லலாம். இனிவரும் தேர்தலில் அமமுக தான் வெற்றிபெறும். அமமுக தமிழகத்தில் ஆட்சி அமைப்பது உறுதி என்றார் அவர்.
விழாவில் எம்எல்ஏ உ.தனியரசு , தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாய சங்கத் தலைவர் பி.அய்யாக்கண்ணு, தருமபுரி மாவட்டச் செயலர் டி.கே.ராஜேந்திரன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.