எஸ்.டி ஜாதி சான்றுகளை விரைந்து வழங்க வேண்டும் என தமிழ்நாடு செட்யூல்டு ட்ரைப் (மலையாளி) பேரவை வலியுறுத்தியுள்ளது.
பாப்பிரெட்டிப்பட்டியில் அப் பேரவையின் மாநில பொதுக்குழுக் கூட்டம் மாநிலத் தலைவர் டி.வரதராஜூ தலைமையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. கூட்டத்தில் எஸ்.டி ஜாதி சான்றுகள் வழங்கக் கோரி விண்ணப்பம் செய்துள்ள தகுதியான மலைவாழ் பழங்குடியின மக்களுக்கு விரைந்து ஜாதி சான்றிதழ் வழங்க வேண்டும். வன உரிமை பாதுகாப்புச் சட்டம் 2006-யை தமிழகத்தில் அமல்படுத்த வேண்டும்.
அரூர் வழியாக செல்லும் திருப்பத்தூர்-சேலம் தேசிய நெடுஞ்சாலையானது போதிய பராமரிப்பு இல்லாமல் குண்டும், குழியுமாக உள்ளது. எனவே மத்திய, மாநில அரசுகள் இந்த சாலையை சீரமைக்க வேண்டும்.
சித்தேரி ஊராட்சிக்குள்பட்ட அரசநத்தம், கலசப்பாடி செல்லும் மண் சாலையை தார்ச் சாலையாக மாற்ற வேண்டும். தருமபுரி மாவட்டத்தில் உள்ள அனைத்து மலை கிராமங்களிலும் சாலை வசதிகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டும்.
அரசு மலைவாழ் பழங்குடியினர் நல உண்டு உறைவிடப் பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
மாநில துணைத் தலைவர் ஏ. சுப்பிரமணி, மாநில பொதுச் செயலர் ஏ.அண்ணாமலை, மாநில பொருளர் வி.வெள்ளையன், அலுவலக செயலர் எம்.மோகன் உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.