தமிழகத்திலுள்ள அனைத்து டாஸ்மாக் மதுக் கடைகளையும் மூட வேண்டும் என வலியுறுத்தி நாம் தமிழர் கட்சியினர் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அரூர் வட்டார வளர்ச்சி அலுவலகம் எதிரே நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு நாம் தமிழர் கட்சியின் மண்டல செயலர் தகடூர் இளமாறன் தலைமை வகித்தார்.
தமிழகத்தில் டாஸ்மாக் மது விற்பனையால் லட்சக்கணக்கான குடும்பங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது. இளம் சிறார்கள் கூட மது அருந்தும் நிலையுள்ளது. மது விருந்து இல்லாத நிகழ்வுகள் ஏதுமில்லை என்ற அளவுக்கு தமிழகத்தில் கலாசாரச் சீரழிவு ஏற்பட்டுள்ளது. எனவே, தமிழகத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் மதுக் கடைகளையும் மாநில அரசு மூடுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் இந்த ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன. இதில் நாம் தமிழர் கட்சியின் மாணவர் பாசறையின் மாநில ஒருங்கிணைப்பாளர் இடும்பாவனம் கார்த்திக், வழக்குரைஞர் பு.அண்ணாதுரை, ஒன்றியச் செயலர் திலீப், தொகுதித் தலைவர் இளையராஜா, தொகுதி செயலர் வெள்ளிங்கிரி, இளைஞர் பாசறை செயலர் லோகநாதன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.