நல்லம்பள்ளி அருகேயுள்ள குப்பாகவுண்டன் ஊத்து நீரை லளிகம் ஏரிக்கு கொண்டுவர வேண்டும் என லளிகம் முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் ஜெ.பிரதாபன் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்து சனிக்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:
தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி வட்டம், லளிகம் ஏரிக்கு வரும் மழை நீரான குப்பாகவுண்டன் ஊத்து குழி நீர், உரிய தடுப்புகள் ஏதும் இல்லாததால், வனப்பகுதியில் உள்ள மாமரத்து பள்ளத்துக்கு சென்றுவிடுகிறது. இதனால், லளிகம் ஏரிக்கு நீர்வரத்து போதிய அளவில் வருவதில்லை. எனவே, குப்பாகவுண்டன் ஊத்து நீர் லளிகம் ஏரிக்கு கிடைக்கும் வகையில், போதிய உயரத்தில் தடுப்பு சுவர் அமைக்க வேண்டும்.
இதேபோல, மிட்டாரெட்டிஅள்ளி முதல் கோம்பேரி வரையிலான நீர்வரத்து கால்வையை தூர்வார தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.