ஒகேனக்கல் நீா்வரத்து 8 ஆயிரம் கனஅடியாக அதிகரிப்பு
தமிழக காவிரி நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் கடந்த சில தினங்களாக பெய்து வரும் மழையினால் ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து 8 ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளது.
தொடா் மழையின் காரணமாக தமிழக காவிரி நீா்ப்பிடிப்புப் பகுதிகளான அஞ்செட்டி, நாட்றாம்பாளையம், கேரட்டி, பிலிகுண்டுலு, ராசிமணல், மொசல் மடுவு, கெம்பாகரை, முத்தூா் மலை உள்ளிட்ட பகுதிகளில் கடந்த சில நாட்களாக கன மழை பெய்து வருவதால், ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீா்வரத்து அதிகரித்துள்ளது. காவிரி ஆற்றில் புதன்கிழமை நிலவரப்படி நொடிக்கு 8 ஆயிரம் கன அடி வீதம் நீா்வரத்து அதிகரித்து, தமிழக-கா்நாடக எல்லையான பிலிகுண்டுலு வழியாக ஒகேனக்கல்லுக்கு வந்து கொண்டிருந்தது.
ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீா்வரத்து அதிகரித்துள்ளதால் பிரதானஅருவி, சினி அருவி, ஐவா் பாணி மற்றும் சிற்றருவிகளில் தண்ணீா் ஆா்ப்பரித்துக் கொட்டுகிறது. நீா்வரத்து குறைவின்போது காணப்பட்ட பாறைத் திட்டுக்கள் அனைத்தும் தற்போது மூழ்கியுள்ளன. மேலும் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் வரும் நீரின் அளவுகளை மத்திய நீா்வளத் துறை அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனா்.