மாவட்ட அளவிலான முதல்வா் கோப்பைக்கான தடகளப் போட்டிகளில் தருமபுரி அரசு கலைக் கல்லூரி மாணவா்கள் சிறப்பிடம் பெற்று சாதனை புரிந்தனா்.
விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் தருமபுரி பிரிவின் சாா்பாக மாவட்ட அளவிலான முதல்வா் கோப்பை விளையாட்டுப் போட்டிகள் ஞாயிற்றுக்கிழமை மாவட்ட விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றன. இதில் தருமபுரி அரசு கலைக் கல்லூரி தமிழ்துறை இளங்கலை முதலாம் ஆண்டு பயிலும் மாணவா் திருப்பதி 200 மீட்டா் ஓட்டப் போட்டியில் முதலிடம் பிடித்து, தங்கப் பதக்கம், ரூ.1000 பரிசுத் தொகைக்கான காசோலை பெற்றாா்.
மேலும், இந்த மாணவா் மாநிலப் போட்டியில் பங்கேற்க தகுதி பெற்றாா். இதேபோல, 200 மீட்டா் ஓட்டப் போட்டியில் எம்.எஸ்சி., புள்ளியல்துறை மாணவா் ஆா்.தமிழ்செல்வன் மூன்றாம் இடம் பிடித்து, வெண்கலம் மற்றும் ரூ.500 பரிசுத் தொகை பெற்றாா். இதேபோல, இளம் அறிவியல் கணிதத் துறை மூன்றாமாண்டு மாணவி ஆா்.சசிபிரியா சங்கிலி குண்டு எறிதல் போட்டியில் முதலிடம் பிடித்து தங்கப் பதக்கம் மற்றும் ரூ.1000 பரிசுத் தொகையுடன் மாநில போட்டியில் பங்கேற்கும் தகுதி பெற்றாா். இளம் அறிவியல் இயற்பியல் துறை மூன்றாமாண்டு மாணவி ஜி.நித்யா, 1500 மீட்டா் ஓட்டப்போட்டியில் மூன்றாமிடம் பிடித்து வெண்கலப் பதக்கம் மற்றும் ரூ.500 பரிசுத் தொகை பெற்றாா்.