இளநிலை உதவியாளருக்கு கரோனா தொற்று உறுதியானதால் நல்லம்பள்ளி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் செவ்வாய்க்கிழமை மூடப்பட்டது.
தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளியில் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகத்தில் பாப்பிரெட்டிப்பட்டி பகுதியைச் சேர்ந்த 35 வயது பெண் இளநிலை உதவியாளராக பணியாற்றுகிறார். இந்த நிலையில் இவருக்கு திங்கள்கிழமை காய்ச்சல் மற்றும் சளி பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அவர் கரோனா தொற்று பரிசோதனை செய்து கொண்டனர்.
இப்பரிசோதனையில் அவருக்கு கரோனா தொற்று பாதிப்பு இருப்பது உறுதியானது. இதைத்தொடர்ந்து அவர் சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதையடுத்து, தொற்று பரவலை தடுக்கும் வகையில், சுகாதாரத்துறையினர், நல்லம்பள்ளி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் கிருமிநாசினி தெளித்தனர்.
மேலும் அந்த அலுவலகம் மூடப்பட்டது. இதேபோல அங்கு பணிற்றும் இரண்டு வட்டார வளர்ச்சி அலுவலர்கள் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் தங்களது வீடுகளில் தனிமைப்படுத்திக் கொண்டனர்.