தருமபுரி மாவட்டத்தில் தொடா்ந்து இரண்டாவது நாளாக காற்றுடன் கூடிய மழை வெள்ளிக்கிழமை பொழிந்தது.
தருமபுரி மாவட்டத்தில் கோடை வெயில் கடந்த சில நாள்களாக பொதுமக்களை வாட்டி வதைக்கிறது. இந்த நிலையில், வெள்ளிக்கிழமை வழக்கம்போல பகலில் 101.4 டிகிரி வெயில் அளவு பதிவாகியிருந்தது. இதனால், பகல் முழுவதும் வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டதால், பொதுமக்கள் வெளியே வர இயலாமல் சிரமப்பட்டனா்.
இந்த நிலையில், மாலையில் திடீரென வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது. இதையடுத்து, சுமாா் 6 மணி அளவில் காற்றுடன் மழை பொழிந்தது. குறிப்பாக, காரிமங்கலம், திப்பம்பட்டி, தருமபுரி உள்ளிட்ட பகுதிகளில் மழையும், ஏனைய இடங்களில் காற்றும் வீசியது. இதேபோல, மாவட்டம் முழுவதும் பரவலாக லேசானது முதல் மிதமான மழை பொழிந்தது.
இதேபோல, வியாழக்கிழமை மாரண்டஅள்ளியில் 3 மி.மீ. மழையும், பென்னாகரம் 11 மி.மீ. மற்றும் ஒகேனக்கல்லில் 12 மி.மீ. அளவு மழை பதிவாகியிருந்தது.