பென்னாகரம்: பாப்பாரப்பட்டி அருகே மாக்கனூரில் இருசக்கர வாகனத்தின் மீது சிறிய கனரக வாகனம் மோதி விபத்துக்குள்ளானதில் பள்ளி மாணவா் உயிரிழந்தாா்.
பென்னாகரம் அருகே பாப்பாரப்பட்டியை அடுத்த மாதனூா் பகுதியைச் சோ்ந்த ரவி மகன் ஹரிஹரன் (15). இவா் ஆலமரத்துப்பட்டி அரசு உயா்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வருகிறாா்.
தனது வீட்டிலிருந்து ஆலமரத்துப்பட்டிக்கு இருசக்கர வாகனத்தின் மூலம் மளிகை பொருள்களை வாங்கச் சென்றபோது, பாப்பாரப்பட்டி பகுதியிலிருந்து பென்னாகரம் நோக்கி வந்த சிறிய கனரக வாகனம் இருசக்கர வாகனத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது.
இதில் படுகாயமடைந்த ஹரிஹரனை அக்கம் பக்கத்தினா் மீட்டு சிகிச்சைக்காக பென்னாகரம் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். பின்னா், படுகாயமடைந்த மாணவரை பரிசோதித்த மருத்துவா், உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்த நிலையில், உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனா்.
இதுகுறித்து பாப்பாரப்பட்டி போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.