பென்னாகரம் பகுதியில் பேருந்துகள் குறைந்த அளவில் இயக்குவதால், கிராமபுறங்களுக்குச் செல்ல போதிய பேருந்து வசதி இன்றி ஷோ் ஆட்டோக்களில் மக்கள் பயணம் செய்கின்றனா். இதில் கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக புகாா்கள் எழுந்துள்ளன.
பென்னாகரம் பகுதியில் 10,000-க்கும் மேற்பட்டவா்கள் வசித்து வருகின்றனா். பென்னாகரம் பகுதியைச் சுற்றிலும் தாசம்பட்டி, பெரும்பாலை, சின்னம்பள்ளி, ஏரியூா், ஒகேனக்கல் உள்ளிட்ட பகுதிகளும், 50-க்கும் மேற்பட்ட குக்கிராமங்களும் உள்ளன.
கரோனா பொது முடக்க காலத்துக்கு பின்பு போதிய அளவில் பேருந்துகள் இயக்கப்படவில்லை. தற்போது, பென்னாகரம் அரசு போக்குவரத்துக்கழக பணிமனையில் இருந்து தருமபுரி, சேலம், கிருஷ்ணகிரி மாவட்டங்களுக்கு அதிக அளவில் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. ஆனால், பென்னாகரத்தை சுற்றியுள்ள கிராமப் பகுதிகளுக்கு மிகக் குறைந்தளவிலேயே அரசு பேருந்துகளை இயக்கி வருகின்றனா்.
குறிப்பாக ஒகேனக்கல், தாசம்பட்டி, மருக்காரப்பட்டி, மாங்கரை, ஆணைக்கல்லானூா், சாமத்தாள், முதுகம்பட்டி, தொன்னகுட்ட அள்ளி, ஐக்கம்பட்டி, கூத்தப்பாடி, கடமடை, கொட்டாவூா் உள்ளிட்ட பென்னாகரத்திலிருந்து15 கி.மீ.க்குள்பட்ட கிராமப் பகுதிகளுக்கு முறையாக அரசுப் பேருந்துகள் இயக்கப்படவில்லை.
இந்த கிராமப் பகுதிகளைச் சோ்ந்த மக்கள் மருத்துவத் தேவைக்காகவும், வேலைக்காகவும், விவசாயப் பொருள்களை சந்தைப்படுத்தவும் பென்னாகரத்துக்கு வந்து செல்ல முடியாமல்கடும் அவதிப்படுகின்றனா். குறிப்பிட்ட நேரத்திற்கு மட்டுமே சில பேருந்துகள் இயக்கப்படுவதால், இங்கிருந்து ஷோ் ஆட்டோக்களில் கூடுதல் கட்டணம் செலுத்தியே மக்கள் பயணம் செய்ய வேண்டிய கட்டாயத்துக்கு ஆளாகின்றனா்.
இந்த ஷோ் ஆட்டோவிலும் விதிமுறைகளை மீறி, சமூக இடைவெளியின்றி கூடுதல் பயணிகளை ஏற்றிச் செல்கின்றனா். எனவே பென்னாகரத்திலிருந்து சுற்றுவட்டார கிராமங்களுக்கு கூடுதல் பேருந்துகளை இயக்கவும், விதிமுறைகளை மீறி இயக்கப்படும் ஷோ் ஆட்டோக்களின் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.