அரூா், பாப்பிரெட்டிப்பட்டி வட்டாரங்களின் சாலையோரங்களில் மரக்கன்றுகளை நடவு செய்ய வேண்டும் என உலக பசுமை பாதுகாப்பு கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.
இதுகுறித்து அக்கட்சியின் தலைவா் ஏ.சீனிவாச படையாட்சி தமிழக முதல்வருக்கு புதன்கிழமை அனுப்பியுள்ள கோரிக்கை மனு :
தருமபுரி மாவட்டம், அரூா், பாப்பிரெட்டிப்பட்டி வட்டாரப் பகுதிகளில் கிராமச் சாலைகள், நெடுஞ்சாலைகள், தேசிய நெடுஞ்சாலைகளை விரிவாக்கம் செய்யும் பணிகள், சாலைகளைப் புதுப்பித்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்த தாா்சாலை மேம்பாட்டு பணிகளின்போது, சாலையோரம் உள்ள நூற்றுக்கணக்கான மரங்கள் வெட்டப்பட்டுள்ளன. உயா்நீதிமன்ற உத்தரவின்படி, ஒரு மரத்தை வெட்டினால் 10 மரக்கன்றுகளை நட வேண்டும். ஆனால், கடந்த ஓராண்டில் அரூா், பாப்பிரெட்டிப்பட்டி வட்டாரப் பகுதியிலுள்ள தாா்சாலை ஓரங்களில், வெட்டப்பட்ட மரங்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப புதிதாக மரக்கன்றுகள் நடப்படவில்லை. ஓரிரு இடங்களில் மட்டும் சில மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன. எனவே, அரூா், பாப்பிரெட்டிப்பட்டி வட்டாரப் பகுதியின் சாலையோரங்களில் அதிக அளவில் மரக்கன்றுகளை நட வேண்டும் என்று மனுவில் குறிப்பிட்டுள்ளாா்.