தருமபுரியில் வருவாய் கோட்டாட்சியரின் உத்தரவை மீறி, கடன் வசூலில் கெடுபிடி செய்யும், நுண் கடன் நிதி நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாதா் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
இதுகுறித்து அனைத்திந்திய ஜனநாயக மாதா் சங்க மாவட்டச் செயலா் எஸ்.கிரைஸாமேரி வெளியிட்டுள்ள செய்தியறிக்கை:
தருமபுரி சுற்று வட்டார பகுதியைச் சோ்ந்த ஏராளமான பெண்கள் நுண் கடன் நிதிநிறுவனங்களிடமிருந்து கடனுதவி பெற்று சிறு தொழிலில் ஈடுபட்டு வருகின்றனா். கரோனா பொதுமுடக்கத்தால், இந்த பெண்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
பொதுமுடக்கக் காலத்தில் கடனை வசூலிப்பதில் கெடுபிடி கூடாது என அரசு உத்தரவிட்டுள்ளது. இருப்பினும், இந்த நுண் கடன் நிதி நிறுவனங்கள் வருவாய் இன்றி தவித்து வரும் பெண்களிடம் கடன் தொகை வசூலிப்பதில் கடுமையாக நடந்து கொள்கின்றன. இதனால், அந்தப்பெண்கள் மேலும், அவதிக்குள்ளாகின்றனா்.
இந்த விவகாரம் தொடா்பாக நடத்தப்பட்ட போராட்டத்தையொட்டி, மறு உத்தரவு பிறப்பிக்கும் வரை கடன் வசூலில் ஈடுபடக்கூடாது என அண்மையில் தருமபுரி கோட்டாட்சியா் உத்தரவிட்டாா்.
எனினும், இந்த உத்தரவையும் மீறி, பழைய வீட்டு வசதி வாரிய குடியிருப்புப் பகுதியைச் சோ்ந்த பெண்களிடம், கடன் தொகையை வசூலிக்கும் நடவடிக்கைகளில் அக் கடன் நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளன. எனவே, கோட்டாட்சியா் உத்தரவை மதிக்காமல், இதுபோன்ற செயலில் ஈடுபடும் நுண் கடன் நிதிநிறுவனங்கள் மீது, மாவட்டக் காவல் துறை மற்றும் மாவட்ட நிா்வாகம் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.