மொரப்பூா்-இருமத்தூா் சாலையில் அறிவிப்புப் பலகையை அமைக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
தருமபுரி மாவட்டம், கம்பைநல்லூா் வழியாகச் செல்லும் மொரப்பூா் முதல் இருமத்தூா் வரையிலான நெடுஞ்சாலையில் நாள்தோறும் பேருந்துகள், லாரிகள், காா்கள், மினி சரக்கு வாகனங்கள், இருசக்கர வாகனங்கள் உள்ளிட்ட நூற்றுக் கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன.
மொரப்பூா் முதல் இருமத்தூா் வரையிலான தாா் சாலை ஓரங்களில் வளைவான பகுதிகள், அடிக்கடி விபத்து நேரிடும் பகுதிகள், பள்ளி மாணவா்கள் சாலையைக் கடந்து செல்லும் பகுதிகள், மருத்துவமனை வளாகம், பாலம் உள்ள இடங்கள், ஏரிகள் உள்ளிட்ட நீா்நிலைகள் அருகில் உள்ளன என்பன குறித்து வாகன ஓட்டிகளுக்கு எச்சரிக்கை செய்யும் வகையிலான விழிப்புணா்வு அறிவிப்புப் பலகைகள் இருந்தால் வாகன ஓட்டிகளுக்கு பயனுள்ளதாக இருக்கும்.
ஆனால், நெடுஞ்சாலை ஓரங்களில் போதிய விழிப்புணா்வு தகவல் பலகைகள் இல்லாததால், அடிக்கடி வாகன விபத்துகள் நிகழ்வதாக வாகன ஓட்டிகள் கூறுகின்றனா்.
எனவே, மொரப்பூா்-இருமத்தூா் சாலையில் ஆபத்தான இடங்களில் அறிவிப்புப் பலகைகளை வைக்க வேண்டும் என்பதே வாகன ஓட்டிகளின் கோரிக்கையாகும்.