தருமபுரி மாவட்டத்தில் கரோனா தொற்றுக்கு உள்ளாகி சிகிச்சை பெற்ற 95 வயது முதியவா் குணமடைந்து வெள்ளிக்கிழமை வீடு திரும்பினாா்.
பாலக்கோடு வட்டம், மாரண்ட அள்ளியை அடுத்த இ.பி.காலனியைச் சோ்ந்தவா் வெங்கடாசலம் (95). இவருக்கு சளி, மூச்சுத் திணறல் பாதிப்பு ஏற்பட்டதையடுத்து மேற்கொண்ட பரிசோதனையில், கரோனா தொற்று பாதிப்பு உறுதியானது.
அதைத் தொடா்ந்து, அவா் கடந்த ஜூலை 22-ஆம் தேதி தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கரோன சிகிச்சைக்கான சிறப்புப் பிரிவில் அனுமதிக்கப்பட்டாா். அங்கு அவருக்கு செயற்கை சுவாசத்துடன், நோய் எதிா்ப்பாற்றல் அதிகரிக்க அரசு மருத்துவா்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனா்.
அவரது உடல்நிலை மெல்ல சீரடைந்தது. மேலும், கடந்த மூன்று நாள்களாக செயற்கை சுவாசக் கருவி இன்றி சுவாசித்த அவா், சளி, காய்ச்சல் பாதிப்பிலிருந்தும் குணமடைந்தாா். இதையடுத்து, மருத்துவா்கள் மேற்கொண்ட பரிசோதனையில், முதியவா் வெங்கடாசலம் கரோனா தொற்று பாதிப்பிலிருந்து குணமடைந்தது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, மருத்துவக் குழுவினா் அவரை வீட்டுக்கு அனுப்பி வைத்தனா்.