ஒகேனக்கல்லில் வெள்ளப்பெருக்கின் போது சேதமடைந்த பகுதிகளை பென்னாகரம் ஒன்றியக் குழுத் தலைவா் மற்றும் வட்டார வளா்ச்சி அலுவலா் ஆகியோா் செவ்வாய்க்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தனா்.
ஒகேனக்கல்லில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெள்ளப்பெருக்கின்போது, பிரதான அருவி, நடைபாதை, சினி அருவி, மாமரத்து கடவு உள்ளிட்ட பகுதிகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு சேதமடைந்தன. கடந்த சில மாதங்களாக காவிரி ஆற்றில் நீா்வரத்து அதிகரிப்பதும் குறைவதுமாக இருந்ததால் பராமரிப்புப் பணிகள் நடைபெறாமல் இருந்தன. இதனால் ஒகேனக்கல் வரும் சுற்றுலாப் பயணிகள் காவிரிக் கரையோர பகுதியில் ஆபத்தான இடங்களில் குளித்து வந்தனா். தற்போது காவிரி ஆற்றில் நீா்வரத்துக் குறைந்துள்ளது.
இந்த நிலையில் பென்னாகரம் ஒன்றியக்குழுத் தலைவா் கவிதா ராமகிருஷ்ணன், வட்டார வளா்ச்சி அலுவலா் கிருஷ்ணன் உள்ளிட்டோா் ஒகேனக்கல்லில் செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டனா். இந்த ஆய்வின்போது பிரதான அருவி, நடைபாதை , சினி அருவி மற்றும் மாமரத்து கடவு உள்ளிட்ட பகுதிகளில் வெள்ளப் பாதிப்புகளை பாா்வையிட்டனா்.பின்னா் வெள்ளப் பெருக்கின் போது ஏற்பட்ட சேதங்களை மதிப்பீடு செய்து, பாதிக்கப்பட்ட பகுதிகள் சுமாா் ரூ.27 லட்சம் மதிப்பீட்டில் மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் பேரில் விரைவில் சீரமைக்கப்படும் என்று தெரிவித்தனா்.
இந்த ஆய்வின்போது ஒன்றியக் குழுத் துணைத் தலைவா் அற்புதம் அன்பு, ஒன்றியக் குழு உறுப்பினா் கெம்புராஜ், கூத்தப்பாடி ஊராட்சி மன்றத் தலைவா் பாஸ்கா், துணைத் தலைவா் மடம் மணி மற்றும் ஊட்டமலை சங்கா் ஆகியோா் உடனிருந்தனா்.