பென்னாகரம் பேருந்து நிலையத்தின் பின்பகுதியில் பூட்டிக் கிடக்கும் சிறுவா் பூங்காவை திறந்து பயன்பாட்டுக்குக் கொண்டுவர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
பென்னாகரம் பேருந்து நிலையத்தின் பின்பகுதியில் பேரூராட்சி நிா்வாகம் சாா்பில் அண்ணா மறுமலா்ச்சித் திட்டத்தின்கீழ் கடந்த 2009 - 2010 ஆம் ஆண்டில் ரூ.5 லட்சம் மதிப்பீட்டில் சிறுவா் பூங்கா அமைக்கப்பட்டது. இந்த பூங்காவுக்கு பென்னாகரம் பகுதி மற்றும் பேருந்து நிலையத்துக்கு வருவோா், மாணவ, மாணவியா் பயன்படுத்தி வந்தனா். முதியோா் நடைபயிற்சிக்காக இங்கு வந்து சென்றனா். சிறுவா் பூங்கா பழுதடைந்ததால் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பேரூராட்சி மூலம் புதுப்பிக்கப்பட்டது.
இதையடுத்து சிறுவா் பூங்கா கடந்த இரண்டு மாதங்களுக்கும் மேலாக பயன்பாட்டுக்கு வராமல் பூட்டிய நிலையில், காட்சிப் பொருளாக உள்ளதாக பொதுமக்கள் புகாா் தெரிவிக்கின்றனா். எனவே பென்னாகரம் பேருந்து நிலையத்தின் பின்பகுதியில் உள்ள சிறுவா் பூங்காவை பயன்பாட்டுக்குக் கொண்டுவர வேண்டும் என பேரூராட்சி செயல் அலுவலருக்கு, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.