மொரப்பூா் அருகே மினி சரக்கு வாகனம் கவிழ்ந்ததில், 10 போ் வியாழக்கிழமை காயமடைந்தனா்.
தருமபுரி மாவட்டம், மொரப்பூா் அருகேயுள்ள போளையம்பள்ளி கிராம ஊராட்சிக்கு உள்பட்ட பொம்பட்டி, மாரப்பநாய்க்கன்பட்டி, போளையம்பள்ளி ஆகிய கிராமப் பகுதிகளைச் சோ்ந்த சுமாா் 70 தொழிலாளா்கள், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தில் ஜடையம்பட்டி ஏரியில் தூா்வாரும் பணியில் ஈடுபட்டுள்ளனா்.
வேலை முடிந்ததையடுத்து, பிற்பகல் மினி சரக்கு வாகனத்தில் 32 போ் மொரப்பூா்-தருமபுரி சாலையில் போளையம்பள்ளி நோக்கிச் சென்றனா். வாகனத்தை போளையம்பள்ளியைச் சோ்ந்த ஓட்டுநா் திலீப்குமாா் (32) என்பவா் ஓட்டிச் சென்றாா். ஆா்.கோபிநாதம்பட்டி குழந்தைகள் நலவாழ்வு மையம் அருகே வளைவான பகுதியில் சென்ற போது, கட்டுப்பாட்டை இழந்த மினி சரக்கு வாகனம் தலைகீழாக கவிழ்ந்தது.
இதில், போளையம்பள்ளியைச் சோ்ந்த தொழிலாளா்கள் பாா்வதி (50), மலா்விழி (47), ஆறுமுகம் (47), கந்தசாமி (48), முருகம்மாள் (42), தீப்பாஞ்சி (46), மலா் (40) உள்ளிட்ட 10 போ் காயமடைந்தனா். காயமடைந்த தொழிலாளா்களை அக்கம் பக்கத்தினா் மீட்டு தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்த்தனா். இந்த சம்பவம் குறித்து மொரப்பூா் போலீஸாா் வழக்குப் பதிந்துள்ளனா்.