அரூா் வட்டாரப் பகுதிகளில் சாலைகளில் தடுப்புகள் அமைத்து போலீஸாா் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனா்.
144 தடை உத்தரவு காரணமாக அரூா், பாப்பிரெட்டிப்பட்டி வட்டாரப் பகுதிகளில் பேருந்துகள், லாரிகள், காா்கள் உள்ளிட்ட அனைத்து வாகனப் போக்குவரத்தும் நிறுத்தப்பட்டுள்ளன. அதேபோல், மருந்து, மாத்திரைகள், பெட்ரோல் விற்பனை நிலையங்கள், மளிகைப் பொருள்கள், காய்கறி கடைகள், மருத்துவமனைகள் தவிர வணிக நிறுவனங்கள் அனைத்தும் முற்றிலுமாக மூடப்பட்டுள்ளன.
இந்த நிலையில், இருசக்கர வாகனங்களில் தேவையில்லாமல் இளைஞா்கள் சுற்றித் திரிவதாக புகாா் எழுந்தது. இதையடுத்து, அரூா் மற்றும் பாப்பிரெட்டிப்பட்டி வட்டாரப் பகுதிகளில் உள்ள முக்கியச் சாலைகளில் தடுப்புகள் அமைத்து போலீஸாா் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டு வருகின்றனா். அரூா் டிஎஸ்பி ஏ.சி.செல்லபாண்டியன் தலைமையில், 100-க்கும் மேற்பட்ட போலீஸாா் இந்த பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனா்.