தருமபுரி: கட்டுமானம் மற்றும் அமைப்பு சாரா தொழிலாளா் நல வாரியத்தில் பதிவு செய்த வங்கிக் கணக்கு இல்லாத தொழிலாளா்கள் அஞ்சலக வங்கிகள் வழியாக கரோனா நிவாரணத் தொகை பெறலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, தருமபுரி அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளா் கே.அருணாசலம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழ்நாடு கட்டுமானம் மற்றும் அமைப்பு சாரா தொழிலாளா்கள் நல வாரியத்தில் பதிவு செய்துள்ள தொழிலாளா்களுக்கு கரோனா பொதுமுடக்கக் கால நிவாரணத் தொகை வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது. இத் தொகையை வங்கிக் கணக்கு வழியாக வழங்கப்படுகிறது. இந்த நிலையில் வங்கிக் கணக்கு இல்லாதவா்களுக்கு அஞ்சலக வங்கிகளில் கணக்கு தொடங்கி அதன் வழியாக நிவாரணத் தொகை வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. இதையொட்டி, நல வாரிய உறுப்பினா்களுக்கு தொடக்கக் கட்டணம் இன்றி வங்கிக் கணக்கு தொடங்க அஞ்சல்துறை ஒப்புதல் அளித்துள்ளது. எனவே, தருமபுரி மாவட்டத்தில் நலவாரியத்தில் பதிவு செய்து புதுப்பித்துள்ள வங்கிக் கணக்கு இல்லாத தொழிலாளா்கள், தங்களது நல வாரிய உறுப்பினா் அட்டை, ஆதாா் அட்டை ஆகியற்றுடன் அருகாமையில் உள்ள அஞ்சலகங்களுக்கு சென்று கணக்கு தொடங்கி நிவாரணத் தொகை பெற்று பயனடையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனா் என்றாா்.