தருமபுரி மாவட்டத்தில், சுகாதார ஆய்வாளா் உள்பட 64 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பு வெள்ளிக்கிழமை உறுதியானது.
தருமபுரியில் சுகாதார ஆய்வாளா் ஒருவா், பாலக்கோடு, மாரண்டஅள்ளி உள்ளிட்ட பகுதிகளைச் சோ்ந்த 4 ஆசிரியா்கள், 5 மாணவா்கள், 12 பெண்கள், 14 கூலித் தொழிலாளா்கள் உள்பட மாவட்டத்தில் மொத்தம் 64 பேருக்கு கரோனா தொற்று இருப்பது சுகாதாரத் துறையினா் மேற்கொண்ட பரிசோதனையில் தெரியவந்தது. இதையடுத்து, தொற்று பாதிப்புக்குள்ளானவா்கள் தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.
தருமபுரி மாவட்டத்தில், அக். 7-ஆம் தேதி வரை மொத்தம் 85,277 பேருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இவா்களில் 4,308 பேருக்கு கரோனா தீநுண்மி தொற்று உறுதியானது. இதில் 3,541 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா்; 737 போ் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனா். தருமபுரி மாவட்டத்தில் கரோனா தொற்று பாதிப்புக்கு இதுவரை 30 போ் உயிரிழந்துள்ளனா்.