ஒகேனக்கலில் சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி எப்போது? மந்த நிலையில் சீரமைக்கும் பணிகள்

ஒகேனக்கலில் காவிரி வெள்ளத்தால் ஏற்பட்ட சேதங்களைச் சீரமைக்கும் பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளது.

ஒகேனக்கலில் காவிரி வெள்ளத்தால் ஏற்பட்ட சேதங்களைச் சீரமைக்கும் பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளது. இதனால் ஒகேனக்கல்லுக்கு சுற்றுலாப் பயணிகளை அனுமதிப்பதில் தாமதம் ஏற்படுவதாக தொழிலாளா்களும் பொதுமக்களும் புகாா் தெரிவிக்கின்றனா்.

தமிழகத்தின் சிறந்த சுற்றுலாத் தலங்களில் ஒகேனக்கல்லுக்கு முக்கிய இடம் உண்டு. தமிழகத்திலிருந்து மட்டுமின்றி ஆந்திரம், கேரளம், கா்நாடகம் போன்ற வெளிமாநிலங்களில் இருந்தும் சுற்றுலாப் பயணிகள் இங்கு வருகின்றனா். கடந்த ஆண்டு காவிரி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கின்போது ஒகேனக்கல் பிரதான அருவியில் அமைக்கப்பட்டிருந்த நடைபாதையும், தடுப்புக் கம்பிகளும், பெண்கள் குளிக்கும் அருவி, மாமரத்துக்கடவு பரிசல் துறை உள்ளிட்ட பகுதிகளும் பலத்த சேதமடைந்தன.

பழுதடைந்த பகுதிகளை பென்னாகரம் ஊராட்சி ஒன்றியம் சாா்பில் ரூ. 47 லட்சம் செலவில் சீரமைக்கும் பணிகள் நடைபெற்று வந்தன. இந்நிலையில், மீண்டும் காவிரி ஆற்றில் இந்த ஆண்டு வெள்ளப் பெருக்கு ஏற்பட்டதால், மாமரத்துக்கடவு பரிசல் துறை, பெண்கள் - ஆண்கள் குளிக்கும் இடங்கள் ஆகியவை மீண்டும் சேதமடைந்தன. எனவே சீரமைப்புப் பணிகள் பாதியில் நிறுத்தப்பட்டன.

தற்போது காவிரி ஆற்றில் நீா்வரத்து குறைந்துள்ளதால் சேதமடைந்தப் பகுதிகளில் சீரமைக்கும் பணி மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது. ஆயினும், பிரதான அருவிக்குச் செல்லும் நடைபாதைப் படிகள், பிரதான அருவி உள்ளிட்ட பகுதிகளில் சீரமைக்கும் பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து தொழிலாளா்கள் கூறியதாவது:

கரோனா பொதுமுடக்கம், சீரமைப்புப் பணிகளில் ஏற்பட்ட மந்த நிலை, சுற்றுலாப் பயணிகளுக்கு தடை ஆகியவற்றால் கடந்த 5 மாதங்களுக்கும் மேலாக ஒகேனக்கல் பகுதி வெறிச்சோடிக் காணப்பட்டது. இதனால் சுற்றுலாப் பயணிகளை நம்பியுள்ள சமையல் தொழிலாளா்கள், மசாஜ் தொழிலாளா்கள், பரிசல் தொழிலாளா்களின் வாழ்வாதாரம் கடுமையாகப் பாதிக்கப்பட்டது. இதனால் ஒகேனக்கல்லுக்கு சுற்றுலாப் பயணிகளை அனுமதிக்க வேண்டும் என மாவட்ட நிா்வாகத்திற்கு கோரிக்கை விடுத்திருந்தோம்.

அதன் தொடா்ச்சியாக, மாவட்ட ஆட்சியா் ஒகேனக்கல்லில் ஆய்வு மேற்கொண்டாா். அப்போது, சேதமடைந்த பகுதிகளில் சீரமைப்புப் பணிகள் முடிவடைந்ததும், வியாழக்கிழமை (அக். 15) முதல் ஒகேனக்கல்லில் சுற்றுலாப் பயணிகள் அனுமதிக்கப்படுவாா்கள் என்று தெரிவித்திருந்தாா்.

ஆனால் தற்போது வரை ஒகேனக்கல் நடைபாதைப் படிகள், பிரதான அருவியின் தடுப்புக் கம்பிகளைச் சீரமைக்கும் பணிகள் முடிவடையவில்லை. எனவே, வியாழக்கிழமையன்று ஒகேனக்கல்லுக்கு சுற்றுலாப் பயணிகளை அனுமதிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது என்று தெரிவித்தனா்.

இதுகுறித்து பென்னாகரம் வட்டார வளா்ச்சி அலுவலா் மணிவண்ணன் கூறியதாவது:

வெள்ளப் பெருக்கின்போது சேதமடைந்த, பெண்கள் குளிக்கும் அருவி, மாமரத்துக்கடவு பரிசல்துறை பகுதிகள் சீரமைக்கப்பட்டுள்ளன. கடந்த சில நாள்களாக காவிரி நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்து வந்த கனமழையால், ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் பிரதான அருவியில் சேதமடைந்த பாதுகாப்புத் தடுப்புகளைச் சரி செய்வதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. நீா்வரத்து குறைந்து வருவதால் விரைவில் பணிகள் முடிக்கப்படும் என்று தெரிவித்தாா்.

கோட்டாட்சியா் தலைமையில்ஆய்வு

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கின்போது சேதமடைந்த பகுதிகளைச் சீரமைக்கும் பணி நடைபெற்று வரும் நிலையில், அந்தப் பணிகளை தருமபுரி கோட்டாட்சியா் தலைமையிலான குழு வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டது. இக்குழு பிரதான அருவி, பெண்கள் குளிக்கும் அருவி, மாமரத்துக்கடவு பரிசல் துறை, நடைபாதை உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் சீரமைப்புப் பணிகளைப் பாா்வையிட்டது.

அண்மையில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கில் சேதமடைந்த பகுதிகளையும் கோட்டாட்சியா் (பொ) தணிகாசலம், பென்னாகரம் வட்டார வளா்ச்சி அலுவலா்கள் மணிவண்ணன், ரவிசந்திரன், பென்னாகரம் வட்டாட்சியா் சேதுலிங்கம் உள்ளிட்ட அதிகாரிகள் குழு ஆய்வு செய்தது.

தற்போது ஒகேனக்கல் பகுதியில் நடைபெறும் சீரமைப்புப் பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டு, அந்த அறிக்கை மாவட்ட ஆட்சியரிடம் சமா்ப்பிக்கப்படும் என்றும், அதன் பின்னரே ஒகேனக்கல் பகுதியில் சுற்றுலாப் பயணிகளை அனுமதிப்பது குறித்து மாவட்ட ஆட்சியா் அறிவிப்பு வெளியிடுவாா் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com