பாப்பிரெட்டிப்பட்டியில் மின் கம்பங்களைச் சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி முதல் சாமியாபுரம் கூட்டுச்சாலை செல்லும் நெடுஞ்சாலை ஓரத்தில் மின் கம்பங்கள் அமைக்கப்பட்டு தெரு விளக்குகள் பொறுத்தப்பட்டுள்ளன.
இந்த நிலையில், சாமியாபுரம் கூட்டுச்சாலை செல்லும் சாலையோரத்தில் பல்வேறு இடங்களில் மின் கம்பங்கள் சாய்ந்து மிகவும் ஆபத்தான நிலையில் உள்ளது. தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவ மழைக் காலங்களில் பலத்த காற்று வீசினால், சாய்ந்த நிலையில் உள்ள இந்த மின் கம்பங்கள் வாகன போக்குவரத்துள்ள தாா் சாலையில் விழுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. இதனால், வாகன விபத்துகள் ஏற்படுவதுடன், உயிரிழப்புகள் நேரிட வாய்ப்புள்ளது. எனவே, பாப்பிரெட்டிப்பட்டி முதல் சாமியாபுரம் கூட்டுச்சாலை செல்லும் தாா் சாலை ஓரத்திலுள்ள மின் கம்பங்களைச் சீரமைக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கையாகும்.