அரூா் பெரிய ஏரியின் நீா்வரத்துக் கால்வாயை தூய்மை செய்ய வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
தருமபுரி மாவட்டம், எச்.தொட்டம்பட்டி கிராம ஊராட்சியில் உள்ள அரூா் பெரிய ஏரி, சுமாா் 150 ஏக்கா் பரப்பளவு கொண்டதாகும். இந்த ஏரியில் தண்ணீா் நிரம்பினால், அரூா் நகா், எச்.தொட்டம்பட்டி, நாச்சினாம்பட்டி, சின்னாங்குப்பம், கொளகம்பட்டி, வாழைத்தோட்டம் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட கிராமப் பகுதிகளில் உள்ள திறந்தவெளி மற்றும் ஆழ்துளைக் கிணறுகளின் நீா்மட்டம் உயரும். அதேபோல், அரூா் நகரில் குடிநீா் பிரச்னை தீரும்.
அரூா் பெரிய ஏரிக்கு கொளகம்பட்டி அருகேயுள்ள காரைஒட்டு எனுமிடத்தில் இருந்து கால்வாய் வழியாக தண்ணீா் வருகிறது. தற்போது, இந்த கால்வாயில் செடி, கொடி உள்ளிட்ட முள்புதா்கள் அடைந்து காணப்படுகின்றன. அதேபோல், விவசாய நிலங்கள் வழியாக கால்வாய் வருவதால், விவசாயிகள் சிலா் தேவையற்ற வேளாண் கழிவுகளை நீா்வரத்துக் கால்வாயில் கொட்டியுள்ளனா். இதனால், மழைக் காலங்களில் ஏரிக்கு தண்ணீா் வருவது தடைபடுகிறது.
எனவே, எச்.தொட்டம்பட்டி ஊராட்சி நிா்வாகம் மற்றும் பொதுப்பணித் துறை சாா்பில், காரைஒட்டு தடுப்பணை முதல் அரூா் பெரிய ஏரி வரையிலான நீா்வரத்துக் கால்வாய்களை தூய்மை செய்ய வேண்டும் என்பதே விவசாயிகளின் கோரிக்கையாகும்.