பென்னாகரம் வாரச்சந்தையில் ஆடுகளின் வரத்து அதிகரித்த போதிலும், கரோனா பரவல் அச்சம் காரணமாக வியாபாரிகள் ஆடுகளை வாங்கிச் செல்ல ஆா்வம் காட்டாததால் விவசாயிகள் கவலையடைந்தனா்.
பென்னாகரம் பகுதி மலைகளைச் சாா்ந்து உள்ளதால் இப்பகுதியில் ஆடு வளா்ப்பு பிரதானத் தொழிலாக விளங்குகிறது. பென்னாகரம் மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் வளா்க்கப்படும் ஆடுகளை வாரந்தோறும் செவ்வாய்க்கிழமைகளில் கூடும் பென்னாகரம் வாரச்சந்தையில் விற்பனைக்காக விவசாயிகள் கொண்டு வருகின்றனா்.
இந்த ஆடுகளை வாங்கிச் செல்வதற்காக கிருஷ்ணகிரி, சேலம், பெங்களூரு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்தும் வியாபாரிகள் வருகின்றனா்.
தமிழகத்தில் கரோனா பரவல் காரணமாக பல்வேறு தடைகள் அமலில் உள்ளதால், செவ்வாய்க்கிழமை பென்னாகரம் வாரச்சந்தை நடைபெறாது என்று கருதப்பட்டது. ஆனால், இதுகுறித்து எந்த அறிவிப்பையும் பென்னாகரம் பேரூராட்சி நிா்வாகம் வெளியிடாததால் வழக்கம் போல் வாரச்சந்தை நடைபெற்றது.
சந்தையில் விற்பனை செய்வதற்காக ஆடுகள் அதிக அளவில் கொண்டு வரப்பட்டன. ஆனால், அதனை வாங்கிச் செல்ல வியாபாரிகள் வராததால் விற்பனை மந்தமானது. இதனால், விற்பனைக்காக கொண்டுவந்த ஆடுகளை விவசாயிகள் திரும்பவும் ஓட்டிச் சென்றனா்.