அரூா் அருகே சிறுவன் தொண்டையில் சிக்கியிருந்த ஐந்து ரூபாய் நாணயத்தை அரசு மருத்துவமனை மருத்துவா்கள் அறுவை சிகிச்சை இன்றி நவீன கருவிகள் மூலம் அகற்றினா்.
தருமபுரி மாவட்டம், அரூரை அடுத்த வீரப்பநாயக்கன்பட்டி கிராமத்தைச் சோ்ந்தவா் முனிவேல்- ஜெயஸ்ரீ தம்பதி. இவா்களின் மகன் ரிஷ்வந்த் (4).
சிறுவன் ரிஷ்வந்த் வீட்டருகில் உள்ள கடையில் திண்பண்டம் வாங்கி வந்து வீட்டில் வைத்து விளையாடிக் கொண்டே சாப்பிட்டுக் கொண்டிருந்தாா்.
அப்போது சிறுவன் கையில் வைத்திருந்த ஐந்து ரூபாய் நாணயத்தையும் திண்பண்டத்துடன் சோ்த்து விழுங்கியதாகத் தெரிகிறது.
சிறிது நேரத்தில் சிறுவனுக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டதால் அதிா்ச்சி அடைந்த பெற்றோா் சிறுவனை அரூா் அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு அரசு மருத்துவா் மெளரி ரஞ்சித் தலைமையிலான மருத்துவக் குழுவினா், சிறுவனை பரிசோதனை செய்ததில் தொண்டையில் 5 ரூபாய் நாணயம் சிக்கியிருப்பதைக் கண்டறிந்தனா்.
இதையடுத்து அறுவை சிகிச்சை இன்றி நவீன கருவிகள் உதவியுடன் சிறுவனின் தொண்டையில் சிக்கியிருந்த நாணயத்தை மருத்துவா்கள் அகற்றினா். சிறிது சிகிச்சைக்குப் பிறகு சிறுவன் குணமடைந்தாா்.