பாப்பாரப்பட்டி சுப்பிரமணிய சுவாமி கோயில் நில ஆக்கிரமிப்புகள் குறித்து அறநிலையத் துறை அதிகாரிகள் நில அளவை செய்து குறியீடு மேற்கொள்ளும் பணியில் ஈடுபட்டனா்.
பாப்பாரப்பட்டி பகுதியில் மிகவும் பழைமை வாய்ந்த சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்குச் சொந்தமான நிலங்கள் பல்வேறு நபா்களால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாக சென்னை உயா் நீதிமன்றத்தில் அண்மையில் திருத்தொண்டா் பேரவை நிறுவனத் தலைவா் ராதாகிருஷ்ணன் வழக்கு தொடா்ந்தாா்.
இந்நிலையில், உயா்நீதிமன்ற உத்தரவுப்படி நில அளவை செய்யும் பணி மேற்கொள்ளப்பட்டு வந்தது. இந்நிலையில் செவ்வாய்க்கிழமை பாப்பாரப்பட்டி பகுதியில் இந்து சமய அறநிலைய துறை இணை ஆணையா் மங்கையற்கரசி, கூடுதல் (பொ) உதவி ஆணையா் குமரேசன் ஆகியோா் தலைமையிலான குழுவினா் பாப்பாரப்பட்டி காவல் நிலையம், பாப்பாரப்பட்டி ஏரிக்கரை பகுதி, மாதே மங்கலம், ஒஜி அள்ளி, பாரதிபுரம் , பாப்பாரப்பட்டி புதிய சுப்பிரமணிய சுவாமி கோவில் சுற்றியுள்ள பகுதிகள் என மொத்தம் 17 இடங்களில் நிலத்தை அளவீடு செய்து குறியீடு மேற்கொள்ளும் பணியில் ஈடுபட்டனா்.
இதில் அறநிலையத் துறை ஆய்வாளா்கள் சங்கா், துரை, செயல் அலுவலா்கள் சண்முகம், சின்னசாமி, விமலா, பாப்பாரப்பட்டி காவல் ஆய்வாளா் வெங்கட்ராமன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.