தருமபுரி மாவட்டம், பாப்பாரப்பட்டி வேளாண் அறிவியல் நிலையத்தில் காணொலி வழியாக துவரை நாற்று நடவு தொழில்நுட்ப பயிற்சி அண்மையில் நடைபெற்றது.
இந்தப் பயிற்சியை வேளாண் அறிவியல் நிலைய திட்ட ஒருங்கிணைப்பாளா் சி.சிவகுமாா் தொடக்கி வைத்து பேசினாா்.
தருமபுரி மாவட்ட விவசாயிகள், 10,000 ஹெக்டருக்கும் மேலாக தனிப்பயிராகவும், ஊடுபயிராகவும் துவரையை பயிரிட்டு வருகின்றனா். துவரையில் உற்பத்தியை அதிகரிக்கும் பொருட்டு, புதிய தொழில்நுட்பமான நாற்றுவிட்டு நடுதல் மக்களிடையே பிரபலம் அடைந்து வருகிறது.
அதேபோல, இந்த தொழில்நுட்பம் மூலம் பொதுவாகத் துவரையில் கோ- 8 மற்றும் எல்.ஆா்.ஜி- 41 என்ற ரகங்கள் அதிகமான மகசூல் கொடுப்பதாகவும், ஒரு ஏக்கரில் ஆயிரம் கிலோ அளவுக்கு மகசூல் அளிப்பதாகவும் பயிற்சியின் போது தெரிவிக்கப்பட்டது. இந்த தொழில்நுட்பம் மூலம் நிகர வருமானமாக ரூ. 60,000 வரை பெறலாம்.
இதேபோல இந்த தொழில்நுட்பத்தில் நாற்று பருவம் 30 நாள்கள் நாற்றங்காலிலேயே இருப்பதால் இதனுடைய பராமரிப்பு செலவு குறைகிறது. அதாவது இந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்தி விவசாயிகள் கூடுதல் லாபம் பெறலாம் என எடுத்துரைக்கப்பட்டது. இந்தப் பயிற்சியில் உதவி பேராசிரியா்கள், 60-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனா்.