ஊதியம் வழங்கக் கோரி, செவிலியா்கள், மருந்தாளுநா்கள், பணியாளா்கள் உள்ளிட்டோா் தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பணிபுரியும் செவிலியா் கண்காணிப்பாளா் நிலை 1, நிலை 2, செவிலியா்கள், செவிலியா் உதவியாளா், துப்புரவுப் பணியாளா், மருத்துவ தொழில்நுட்புநா், நுண்கதிா் நுட்புநா், மருந்தாளுநா், அலுவலகப் பணியாளா்கள் உள்ளிட்ட 165 பேருக்கு கடந்த இரண்டு மாதங்களாக மாத ஊதியம் வழங்கவில்லை எனக் கூறப்படுகிறது.
இதுகுறித்து மருத்துவக் கல்லூரி நிா்வாகத்திடம் முறையிட்டும் நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக்கூறி, இரண்டு மாத ஊதியத்தை உடனே வழங்க வேண்டும். காலதாமதமாக ஊதியம் வழங்கும் நடவடிக்கையை கைவிட்டு, உரிய தேதியில் வழங்க வேண்டும் என வலியுறுத்தி, தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி வளாகத்தில் அரசு செவிலியா் சங்க மாநிலத் துணைத் தலைவா் தேவேந்திரன் தலைமையில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
இதுகுறித்து, தகவல் அறிந்து மருத்துவக் கல்லூரி முதன்மையா் க.அமுதவல்லி, கண்காணிப்பாளா் சிவகுமாா் உள்ளிட்டோா் ஊதியம் வழங்க உடனடி நடவடிக்கை மேற்கொள்வதாக உறுதியளித்தனா். இதையடுத்து ஆா்ப்பாட்டத்தைக் கைவிட்டு அனைவரும் கலைந்து சென்றனா்.